கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவை ஏன் நிகழ்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். மானுட வன்முறையின் காரணம் என்ன என்பதை கண்டறிய டார்வின் கோட்பாடு பெருமளவு உதவி புரிந்தது. இது பற்றிய சுவையான ஒரு ஆய்வு முடிவை இடுகிறேன்.
சிங்கம்,புலி உட்பட பல மிருகங்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதுண்டு. ஆனால் அவை தம்மினத்தவரை படுகொலை புரிவதில்லை. ஒரு பெண்சிங்கத்துக்காக இரு ஆண்சிங்கங்கள் சண்டையிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆண்சிங்கம் தோற்றுப்போனால் சண்டை அதோடு முடிந்துவிடும். வென்ற சிங்கம் தோற்ற சிங்கத்தை ஏதும் செய்யாது. ஆனால் குரங்கினத்தில் அப்படி அல்ல (இங்கு குரங்கு என்று சொல்வது ஏப் இனத்தை.குரங்கினம் என்பது மனிதனையும் சேர்த்துதான்).
குரங்கினங்களில் மற்ற வகை மிருகங்களிடையே காணப்படாத பல குணாதிசயங்கள் உண்டு. படை திரட்டி தம்மினத்தவரிடையே போர் புரிவது, அரசியல் புரிந்து பதவியை கைப்பற்றுவது, கற்பழிப்பது, குழு வன்முறையில் ஈடுபடுதல், குழு கற்பழிப்பில் ஈடுபடுதல், ஆயுதங்கள் பயன்படுத்துவது போன்ற குணாதிசயங்கள் குரங்கினத்துக்கு மட்டுமே சொந்தம்.
இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்தபோது பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இதையும் தூக்கி அடிக்கும் விதமாக குரங்கினத்தில் விபச்சாரம் நடைபெறுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பு ஏற்பட்டது.
ஆனால் பிறகு நடந்த பல ஆய்வு முடிவுகள் இதை உறுதிபடுத்தின.(பழத்துக்காகவும், மாமிசத்துக்காகவும் பெண் ஏப்கள் விபச்சாரத்தில் ஈடுபடும்.) இந்த ஆய்வுமுடிவுகள் ஆந்தரபாலஜி எனப்படும் மானுடவியல் துறையில் பல புதிர்களை விடுவிக்க உதவின. மானுட வன்முறையின் மூலத்தை அறிய இவை உதவின.
1974′ல் டான்சானியாவில் கோம்பே வனப்பகுதியில் குரங்கு வன்முறையை குட் ஆல்(பார்க்க புகைப்படம்) என்ற பெண் ஆய்வாளர் முதன்முறையாக பதிவுசெய்தார். உயிரியல் துறையை திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஆய்வு இதோ.
ஏப்கள் மனிதனை போல் சமுதாயமாக தான் வாழும்.ஒரு ஏப் சமுதாயத்துக்கும் இன்னொரு ஏப் சமுதாயத்துக்கும் இடையே அடிக்கடி போர் ஏற்படுவதுண்டு. கொரில்லா தாக்குதல் என்று சொல்லப்படும் தாக்குதல்களை செய்வதில் ஏப்கள் புகழ்பெற்றவை. உளவு பார்த்தல், ரகசிய தாக்குதல்கள் போன்றவையும் ஏப்களிடையே உண்டு.
குட் ஆல் கண்காணித்துக் கொண்டிருந்த ஏப் குடியிருப்பில் இருந்து 7 ஏப்கள் இரவு ரகசியமாக கிளம்பின. 6 ஆண்கள்,1 பெண்.குட் ஆல் அவற்றை பின் தொடர்ந்தார். அந்த பெண் ஏப்புக்கு குட் ஆல், கிகி என்று பெயர் வைத்திருந்தார். கிகி குழந்தை பாக்கியம் இல்லாத கோபக்கார ஏப்பாகும். மிக ரகசியமாக பதுங்கி பதுங்கி இந்த 7 ஏப்களும் எதிரியின் காட்டு பகுதிக்குள் நுழைந்தன. ஒருவருக்கொருவர் சைகை செய்துகொள்வதும் சப்தம் எழுப்பாமல் செல்வதுமாக யுத்த தந்திரங்களை அவை லாவகமாக கையாண்டன. எதிரி குடியுருப்பில் இருந்த ஒரு சிம்பன்ஸி(கோடி என்று பெயர்) தனியாக ஒரு மரத்தில் ஏறி பழம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது.
கோடி 21 வயது நிரம்பிய வலுவான சிம்பன்ஸியாகும். கிகி மெதுவாக சப்தமெழுப்பாமல் மரத்தின் மீதேறி கோடியை அடித்து கீழெ தள்ளியது. கீழே விழுந்த அதிர்ச்சியில் கோடி தள்ளாடியபோது அம்ப்ரி என்ற சிம்பன்ஸி அதன் காலை பிடித்தது. இரண்டு காலையும் ஒரு மல்யுத்த வீரன் போல் அம்ப்ரி பிடித்துக்கொள்ள மற்ற சிம்பன்ஸிக்கள் தாக்குதலை தொடங்கின. குழுவாக சேர்ந்து அடி, உதை, குத்து, கடி, முகத்தின் மீது மிதித்தல், மர்மஸ்தானத்தில் குறிபார்த்து தாக்குதல் என்று அனைத்தும் நடந்தன. (ஒரு சிம்பன்ஸியின் எடை சுமார் 50 கிலோ)
கிகி சுற்றிவந்து வெறிக்கூச்சலிட்டபடி நடனமாடியது. கன்னியொருத்தி உற்சாகப்ப்டுத்தினால் ஆண் ஏப்களுக்கு கேட்கவும் வேண்டுமோ. அடி மேலும் வலுத்தது. பாவம் கோடி. 10 நிமிட தாக்குதலுக்கு பிறகு கோடி மயங்கி சரிந்தது. கூட்டம் தாக்குதலை நிறுத்தியது.அடுத்து என்ன செய்யவேண்டும் என ஆலோசித்தது. இறுதியாக 2 சிம்பன்ஸிக்கள் ஒரு பெரிய கல்லை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்து சரியாக கோடியின் தலைமீது போட்டன. கதை முடிந்தது. 7 சிம்பன்ஸிக்களும் வெற்றிகரமாக தமது குடியிருப்புக்கு திரும்பியதாக குட் ஆல் எழுதுகிறார்.எதிரியின் படையில் இருந்த ஒரு வலுவான ஆள் காலி.
குட் ஆலின் இந்த ஆய்வு முடிவு உயிரியல் துறையை திரும்பி பார்க்க வைத்த ஆய்வாகும்.ஏப்களிடையே போர் தந்திரமும்,குழு வன்முறையும் உண்டு என்பதை அன்று தான் அறிவியல் உலகம் அறிந்தது. ஜேன் குட் ஆல் பற்றிய விக்கிபீடியா பதிவு இதோ http://en.wikipedia.org/wiki/Jane_Goodall