குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கான்டிராக்டர் திடீரென்று ஏதோ கணக்கு போட்டு ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மம்முட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்?துரத்தி விட்டார்.
40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள்.2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது.
“புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மம்முட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்” என்றான் நெகிழ்ச்சியுடன் ஒருவன்.
“மம்முட்டி மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஸ்பூன் ஏந்திய 3000 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்” என்றான் புரிதலுடன் இன்னொருவன்.
இருவரும் வேறு வேலை தேடி பட்டணத்துக்கு கிளம்பினார்கள்