உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 23, 2007

29.வீரபாண்டிய கவுண்டமணி

Filed under: Comedy, Light reading, Short stories — Selvan @ 4:47 மு.பகல்

வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர்.கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா?

கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை

ஜாக்சன்:”நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?”

கவுண்டர்:”ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா.நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?’

ஜாக்சன்:”ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?’

கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பன்னிக்குட்டி மாதிரி இருக்கே? கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?”

 செந்தில்:”அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க.டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்>”

கவுண்டர் :”அப்படியாடா சொல்றே?”(பயத்துடன் திரும்பி) “நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர்.அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்”

ஜாக்சன்:” நட்பு வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்”

 கவுண்டர்: “இல்லைங்க ஆபீசர்.நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர்.இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?” ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார். ஜாக்சனுக்கு கோபம் வருகிறது.

 ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கவுண்டர்:”என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்”

ஜாக்சன்: “சொன்னால் எண்ணிக்கை தெரியாது.”

கவுண்டர்: (நக்கலாக)”ஓ ஐ ஆம் சாரி.நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்) ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?”

ஜாக்சன்:”எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகம் பிடித்தவனே,சொல்கிறேன் கேள். பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை”

 கவுண்டர்: “வானம் பொழியுது,பூமி விளையுது.நடுவுல வெள்ளைப் பன்னி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்?நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா? என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?”

ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார்.

ஜாக்சன்: “என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்”

கவுண்டர்: “ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ” மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார்.

28.பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி

Filed under: Comedy, Light reading, Short stories — Selvan @ 4:20 மு.பகல்

பாகிஸ்தானில் இந்திய நட்சத்திர கிரிக்கட் அணி சுற்றுப்பயணம் செய்கிறது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விஜய்காந்த் தமது அணி முதலில் பேட் செய்யும் என்கிறார். இரண்டு கதாநாயகர்கள் நடிப்பது தமிழ்திரையுலகில் கிடையாது என்பதால் ஒவ்வொருவராக பேட் செய்வது என முடிவு செய்கிறார்கள்.

முதலில் நெப்போலியன் பேட் செய்ய வருகிறார்.அவரை பார்த்த அக்தர் குழம்புகிறார். “என்னங்க அம்பயர்,இவர் வேட்டி கட்டிட்டு வர்ரார்.பேட் எதுவும் எடுத்துட்டு வராம வெறுங்கையை வீசிட்டு வர்ரார்?” என அம்பயரிடம் கேட்டார் அக்தர்.

“அந்த தம்பி அப்படித்தான்.பவுன்சர் கிவுன்சர் இவருக்கு வீசிப்புடாதே.வில்லங்கமாயிடும்” என அம்பயர் எச்சரிக்கிறார்.

நெப்போலியன் மீசையில் கைவைத்து முறுக்கியபடி விக்கட் அருகே நிற்கிறார்.அக்தர் வேகமாக ஓடிவந்து பந்தை வீச நெப்போலியனின் கை அவரின் சட்டைக்கு பின்னே சென்று 6அடி நீள திருப்பாச்சி அரிவாளை எடுக்கிறது.ஒரே சீவு.பந்து சுக்குநூறாகிறது. “சீவலப்பேரி பாண்டிலே..” என கர்ஜிக்கிறார் நெப்போலியன்.அனைவரும் நடுநடுங்க கம்பீரமாக வீரநடை போட்டு பெவிலியனுக்கு திரும்புகிறார் நெப்போலியன்.

அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கேப்டன் விஜய்காந்த் களமிறங்குகிறார்.அக்தர் இப்போது மிகவும் பயந்து போய் அம்பயரிடம் கேட்கிறார். “ஏனுங்க இவரும் பேட் இல்லாம வர்ராரு.இவர் என்ன பண்ணுவாரு?’ “அதெல்லாம் இப்ப எதுக்கு?ஆனா பவுன்சர் எல்லாம் இவருக்கு போட்டா நீ அதோகதிதான்” என எச்சரிக்கிறார் அம்பயர்.

பயந்து போய் அக்தர் பந்துவீச விஜய்காந்த் அந்தரத்தில் பறந்து பந்தை காலால் உதைக்கிறார்.அம்பயர் எல்.பி.டபிள்யு கொடுக்க விஜய்காந்த் அது தவறு என்று கனல் பறக்க வசனம் பேசுகிறார்.கடைசியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்து அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை என விளக்கவே தன்னை கைதுசெய்ய சொல்லி விஜய்காந்த் கையை நீட்டுகிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன் கெஞ்சி கூத்தாடி அவரை பெவிலியனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ஆரவாரமாக களமிறங்குகிறார்.அக்தர் பயந்துபோய் நிற்க அவரிடம் மெதுவாக சூப்பர்ஸ்டார் முணுமுணுக்கிறார். “அக்தர் கண்ணா,நான் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்.பவுன்சர் ஏதாவது போட்டா சின்ன வயசுல நீ குடிச்ச தாய்ப்பால் வெளியில வந்துடும்”

பயந்து போய் அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர்.

அடுத்து கலைத் தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் களமிறங்குகிறார். அக்தர் வேகமாக பவுன்சர் வீசுகிறார்.சிவாஜியின் நெஞ்சில் அந்த பவுன்சர் பட்டு அவர் கீழே விழுகிறார்.மெதுவாக கண்ணீர் வடித்தபடி எழுகிறார்.

“ஏம்பா கண்ணா அக்தரு..உன்னே சின்ன வயசுல மார்மேலயும் தோள் மேலயும் தூக்கிபோட்டு வளர்த்தேன்.அப்போ நீ என் நெஞ்சுல எட்டி உதைப்பே.அப்போ அது விளையாட்டா இருந்தது.இப்போ நிஜமாவே நெஞ்சுல பவுன்சர் வீசிட்டீயே..”

அம்பயர் முதல் டிவி வர்ணணையாளர்கள் வரை அனைவரும் அழுகின்றனர்.அக்தரும் அழுகிறார்.கண்ணீர் வடித்தபடி சிவாஜி நிற்க தலைவிரி கோலமாக கண்ணாம்பா நுழைகிறார்.

“மனோகரா..என் செல்வனே..எதிரியை வீழ்த்தி புதுக் காவியம் படைக்க நீ புறப்பட்ட போது ஏடுகளை திருடியும் எழுத்தாணியை ஒளித்து வைத்தும் அதை தடுத்தவள் நான் தான். மறக்குலத்தில் பிறந்த வீரப்பெண்மனி நான் என்பது உண்மையானால்,பெண்கள் விடும் கண்ணீருக்கு சக்தி உண்டு என்பது உண்மையானால்,சோழநாட்டு மன்னரின் பத்தினி நான் என்பது உண்மையானால் அக்கிரமக்காரர்களின் சிரிப்பு அடங்கட்டும்.நியாயம் வெல்லட்டும். பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு”

“அம்மா..” என அலறுகிறார் சிவாஜி.

 ”தாயின் ஆணை கிடைத்து விட்டது.புறப்படு..”

கத்தியை எடுத்துக்கொண்டு சிவாஜி புறப்படும் முன் அக்தர்,இன்ஸமாம் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.

ஜனவரி 28, 2007

3.சோமு தங்கச்சியும் குஷ்புவும

Filed under: Comedy, Culture, Politics, Short stories — Selvan @ 1:59 பிற்பகல்

எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன். அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள். சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன். நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். “என்னடா ஆச்சு” என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான்.  “அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?” என்று கேட்டேன்.”கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது. அதில் அடிபட்டுவிட்டது” என்றான்.

“ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா ” என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான். என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை. “அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க” என்றேன். பிலுபிலு என்று பிடித்துகொண்டான்.”திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா” என்று பொங்கினான்.

“சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு” என்று கேட்டேன். அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. “ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது. அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு” என்றான்.

‘சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் ” என்றேன். அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது.”அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா?” என்று கேட்டான்.

“இல்லடா அது முடியாது” என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.

“அதுதாண்டா நானும் சொன்னேன். ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க, பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா” அப்படின்னு கேட்டான். எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது.

“இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே” என்று கேட்டேன். “ஆமாம்” என்று சொன்னான். “நீ மட்டும் ஏண்டா போறே?” என்றேன்.”அது என் அடிப்படை சுதந்திரம்” என்று சொன்னான். “உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா” என்று கேட்டதற்கு “இல்லை,தமிழ் கலாச்சாரம்” என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது.

“சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா?”

“பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும்?”

“சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா?”

“கண்டிப்பா..இது என்ன கேள்வி?என்னோட ஆளுன்னு இல்லை. எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன்.  12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி?”

“சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா?”

“கண்டிப்பா வேணும்.”

“அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே?”

“கைய உடைப்பேன்.நான் ஆம்பளை”

“என்னடா அக்கிரமமா இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய்?”

“அது என் தங்கச்சிக்கு சொன்னது. என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான்”.

“அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா?”

“அதெப்படி?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது?அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது”

“குஷ்பு சொன்னதும் அதுதாண்டா.எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும்”னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன?”

“குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும்”

“எப்படி பேசிருக்கணும்?”

“சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு” பேசிருக்கணும்.

நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.