எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன். அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள். சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன். நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். “என்னடா ஆச்சு” என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான். “அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?” என்று கேட்டேன்.”கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது. அதில் அடிபட்டுவிட்டது” என்றான்.
“ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா ” என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான். என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை. “அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க” என்றேன். பிலுபிலு என்று பிடித்துகொண்டான்.”திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா” என்று பொங்கினான்.
“சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு” என்று கேட்டேன். அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. “ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது. அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு” என்றான்.
‘சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் ” என்றேன். அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது.”அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா?” என்று கேட்டான்.
“இல்லடா அது முடியாது” என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.
“அதுதாண்டா நானும் சொன்னேன். ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க, பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா” அப்படின்னு கேட்டான். எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது.
“இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே” என்று கேட்டேன். “ஆமாம்” என்று சொன்னான். “நீ மட்டும் ஏண்டா போறே?” என்றேன்.”அது என் அடிப்படை சுதந்திரம்” என்று சொன்னான். “உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா” என்று கேட்டதற்கு “இல்லை,தமிழ் கலாச்சாரம்” என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது.
“சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா?”
“பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும்?”
“சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா?”
“கண்டிப்பா..இது என்ன கேள்வி?என்னோட ஆளுன்னு இல்லை. எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன். 12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி?”
“சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா?”
“கண்டிப்பா வேணும்.”
“அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே?”
“கைய உடைப்பேன்.நான் ஆம்பளை”
“என்னடா அக்கிரமமா இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய்?”
“அது என் தங்கச்சிக்கு சொன்னது. என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான்”.
“அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா?”
“அதெப்படி?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது?அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது”
“குஷ்பு சொன்னதும் அதுதாண்டா.எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும்”னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன?”
“குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும்”
“எப்படி பேசிருக்கணும்?”
“சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு” பேசிருக்கணும்.
நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.